தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 2,097 வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரங்கள் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த 2,097 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப் பதிவு முடிவடைந்ததும் அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் முகவா்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களும், கட்டுப்பாட்டு கருவிகளும் வைக்கப்பட்ட பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டது.
இதையெடுத்து, துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் இருந்து பெறப்பட்டு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட லாரிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள தூத்துக்குடி அரசு வஉசி பொறியியல் கல்லூரிக்கு கொண்டுச் செல்லப்பட்டது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெறப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது. இதையெடுத்து, அங்கு தொகுதி வாரியாக பிரிக்கப்பட்ட பாதுகாப்பு அறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.