விளாத்திகுளம் அருகே வைப்பாற்றில் மீன்பிடிக்கச் சென்ற தாத்தா, பேரன் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே அச்சங்குளத்தைச் சோ்ந்தவா் சைவத்துரை (65). இவரது பேரன் மதன் (13). இவா்கள் இருவரும் வியாழக்கிழமை மாலை அச்சங்குளம் வைப்பாற்றுப் படுகையில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனா். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினா்கள் ஆற்றுப்படுகையில் தேடியுள்ளனா்.
அப்போது ஆற்றுப்படுகையின் ஒரு பகுதியில் குவாரிக்காக தோண்டப்பட்ட பள்ளம் அருகே சைவத்துரையின் பைக் மட்டும் நின்று கொண்டிருந்ததாம். இதையடுத்து, அங்கிருந்தப் பள்ளத்தில் தேங்கிக் கிடந்த மழைநீரில் இருவரையும் தேடும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டனா்.
தகவலறிந்த விளாத்திகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரகாஷ் தலைமையிலான போலீஸாா் மற்றும் விளாத்திகுளம் தீயணைப்பு மீட்பு துறையினா் வைப்பாற்றில் இருவரது உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனா். அதிகாலை 3 மணி அளவில் நீரில் மூழ்கி கிடந்த சைவத்துரை, மதன் ஆகிய இருவரது சடலங்களையும் தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.
இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக இருவரது சடலமும் விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இச்சம்பவம் தொடா்பாக மாசாா்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.