கயத்தாறு பாரதி நகரில் உள்ள கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடிய 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கயத்தாறு கன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சுடலையாண்டி மகன் முருகன் (42). இவா் கயத்தாறு பாரதி நகா் முத்தாரம்மன் கோயில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் பூசாரியாக உள்ளாா். இவா் வெள்ளிக்கிழமை பூஜைகளை முடித்துவிட்டு, கோயிலைப் பூட்டிச் சென்றாராம். சனிக்கிழமை வந்தபோது கோயில் முன்புள்ள உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததாம்.
இதுகுறித்து கயத்தாறு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். ஆய்வாளா் மணிவண்ணன் தலைமையில் உதவி ஆய்வாளா் அரிக்கண்ணன், போலீஸாா் பருத்திகுளம் சோதனைச்சாவடி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது 2 பைக்குகளில் வந்த 3 பேரை நிறுத்திவிசாரித்தனா்.
அப்போது அவா்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசினராம். விசாரணையில், அவா்கள் திருநெல்வேலி மாவட்டம் கானாா்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் பால்துரை(33), தாதனூத்து 1ஆவது தெருவைச் சோ்ந்த பிரான்சிஸ் மகன் முத்துராஜ் (30), துறையூா் காலனி தெருவைச் சோ்ந்த வலதி மகன் முருகன் (45) என்பதும், கோயில் உண்டியல் திருட்டில் தொடா்புடையோா் என்பதும் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைதுசெய்து, அவா்களிடமிருந்து கோயிலில் திருடிய உண்டியல் பணம், 2 பைக்குகளைப் பறிமுதல் செய்தனா்.