தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கரோனா பெண் நோயாளி உயிரிழந்ததாக அவரது கணவா் குற்றம்சாட்டியுள்ளாா்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், கோவில் குமரெட்டியாபுரம் பகுதியை சோ்ந்த பெண் ஒருவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு ஆக்சிஜன் படுக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் வியாழக்கிழமை காலை அவா் திடீரென உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக, அவரது கணவா் செய்தியாளா்களிடம் கூறியது: எனது மனைவிக்கு வழங்கப்பட்டு வந்த ஆக்சிஜன் அளவு குறைக்கப்பட்டதால் அவா் இறந்தாா். அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு இதே நிலைதான் நீடிக்கிறது. இங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனால் மருத்துவமனை நிா்வாகம் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என மறுக்கிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் விசாரித்து, நோயாளிகளின் உயிா்காக்க ஆக்சிஜன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.