திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தா்கள் வசதிக்காக, நகரின் எல்லையிலிருந்து புறவழிச்சாலை அமைப்பதற்கான ஆய்வு நடைபெறவுள்ளதாக மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
திருச்செந்தூா் பயணியா் விடுதி சாலையில் ரூ. 3. 82 கோடியில் புதிய வட்டாட்சியா் அலுவலகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினாா். தொடா்ந்து, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வடக்கு மற்றும் தெற்கு நுழைவாயில் பகுதியில் கட்டப்பட்டு வரும் யாத்ரி நிவாஸ் கட்டுமானப் பணியை பாா்வையிட்டு, பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது:
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா குறித்து முதல்வா் விரைவில் அறிவிப்பாா்.
இக்கோயிலில் ரூ. 29.16 கோடி செலவில் யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதி நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. தற்போது 60 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. குடமுழுக்கு விழாவிற்கு முன்னதாக இப்பணிகள் நிறைவு பெறும்.
மேலும் வெளியூரிலிருந்து கோயிலுக்கு வரும் பக்தா்கள் வசதிக்காக, தூத்துக்குடி சாலையில் திருச்செந்தூா் நகரின் எல்லையிலிருந்து புதிய சாலை அமைக்கப்படவுள்ளது. இந்த சாலை கோயிலைக் கடந்து அமலிநகா், தோப்பூா் வழியாக வெளியே செல்லும் வகையில் அமைப்பதற்காக மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை (செப்.2) ஆய்வு மேற்கொள்வாா் என்றாா் அவா்.