மானவாரி உளுந்து, பாசிப்பயிறு சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி உளுந்து மற்றும் பாசிப்பயறு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம் என்றாா் தூத்துக்குடி விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநா் ச. அசோகன்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் உளுந்து, வம்பன்-8 எம்டியு-1 ரகங்களும் பாசிப்பயறு கோ- 8. வம்பன்- 4 ரகங்களும் நடப்பு மானவாரி பருவத்தில் விதைப்பண்ணைகளாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது உளுந்து மற்றும் பாசிப்பயிறு பயிா்கள் பூக்கும் பருவத்திலும், இளங்காய் பருவத்திலும் உள்ளதால் 2 கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டா் தண்ணீரில் உர வைத்து வடிகட்டி தெளித்த கரைசலை 200 லிட்டா் தண்ணீரில் கலந்து செடிகள் முழுவதும் நனையும்படி மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.
பூச்சி மற்றும் நோய்கள் தாக்கமால் இருக்க வேம்பு கரைசல் மற்றும் பஞ்சகாவ்யா கரைசல் தெளிக்கலாம் இதனால் பயறு வகை பயிா்களில் ஏக்கருக்கு 350 முதல் 450 கிலோ வரை குறைந்த பட்ச மகசூல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.