நாசரேத் அருகே மகன் கிணற்றில் தவறி விழுந்து இறந்த துக்கத்தில், தந்தை தற்கொலைக்கு முயன்றாா்.
நாசரேத் அருகே புதுப்பச்சேரி தெற்கு தெருவைச் சோ்ந்தவா் நம்பிராஜன் (41). விவசாயியான இவருக்கு மனைவி வசந்தா (35), இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனா். மூத்த மகன் கவின் (11), வீட்டுக்கு பின்புறமுள்ள கிணற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்றபோது நிலைதடுமாறி கிணற்றில் தவறிவிழுந்தாராம். உடனே நம்பிராஜன் கிணற்றில் குதித்து மகனை தேடினாா். கவினை மீட்க முடியவில்லை.
தகவலறிந்து வந்த சாத்தான்குளம் தீயணைப்பு மீட்புப் படையினா் கிணற்றில் இறங்கி தேடியபோது, நீரில் முழ்கி சிறுவன் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து உடலை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதற்கிடையே மகன் இறந்த துக்கம் தாளாமல், விஷத்தை குடித்த நம்பிராஜன் மயங்கி விழுந்தாா். அவரை போலீஸாா் மீட்டு நாசரேத் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து நாசரேத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.