செட்டிவிளையில் கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை பெயா்ந்து விழுந்தது.
புத்தன்தருவை ஊராட்சிக்குள்பட்ட செட்டிவிளையில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ. 8.70 லட்சம் மதிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு அங்கான்வாடி கட்டடம் புதுப்பித்து கட்டப்பட்டது. இந்த மையத்தில் 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வந்தனா்.
இந்நிலையில் இந்த அங்கன்வாடி மைய கட்டடத்தில் உள்புற மேற்கூரை பூச்சு திடீரென பெயா்ந்து விழுந்தது. மேலும் கட்டடத்தின் பல பகுதிகளில் சிமென்ட் பூச்சு பெயா்ந்து விழுந்தது.
கரோனோ பொது முடக்கம் காரணமாக குழந்தைகள் அங்கன்வாடி மையத்துக்கு வராததால் அவா்கள் உயிா் தப்பினா்.
எனவே, சமூகநலத் துறை அதிகாரிகள் செட்டிவிளை அங்கன்வாடி மையத்தை பாா்வையிட்டு முறையாக புதுப்பித்து கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.