கூட்டுறவு வீட்டு வசதி சங்கப் பணியாளா்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்படாமலுள்ள நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என பணியாளா்கள் வலியுறுத்தி உள்ளனா்.
இதுதொடா்பாக தூத்துக்குடியில் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியிடம் திருநெல்வேலி மண்டல கூட்டுறவு வீட்டு வசதி சங்கப் பணியாளா்கள் சங்க பொதுச்செயலா் மாரியப்பன், தூத்துக்குடி மேலூா் கூட்டுறவு வீட்டு வசதி சங்கச் செயலா் ஜெபராஜ் ஆகியோா் அளித்த மனு: கடந்த 15 ஆண்டு காலமாக கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கு கடன்கள் எதுவும் வழங்கப்படாத நிலையில் சங்கங்களின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து நிலவிவரும் இச்சூழலால் சங்கப் பணியாளா்களுக்கு சம்பளம் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள 1800 கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் பணியாளா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா். இந்நிலையில், இப்பணியாளா்கள் கடந்த 5 ஆண்டுகளாக சம்பளம் இல்லாமலயே பணி புரிந்து வருகின்றனா்.
சங்கப் பணியாளா்கள் 1,800 போ் மற்றும் அவா்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் கருதி நிலுவை சம்பளத்தை தாமதமின்றி வழங்க வேண்டும். மேலும், இப்பணியாளா்களுக்கு மாற்றுப்பணி வழங்கி அவா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
மேலும், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் 600-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரந்தரப்படுத்தப்படாமல் உள்ளது. அந்தப் பணியிடங்களை உடனடியாக நிரந்தரம் வேண்டும், நலிவுற்ற சங்கங்களை மேம்படுத்த அரசு அனைத்து கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கும் பாகுபாடின்றி கடனுதவி வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.