திருச்செந்தூா் கோயில் வாசல் வரை பேருந்துகளை இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் நகரத் தலைவா் ராஜகோபால், தமிழக செய்தி விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜுவிடம் அளித்த மனு: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா்.
தற்போது திருச்செந்தூருக்கு செல்லும் பேருந்துகள் அங்குள்ள பேருந்து நிறுத்தம் வரை செல்கின்றன. கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் அங்கிருந்து ஆட்டோ, காரில் செல்ல வேண்டியவுள்ளது. இதனால் அவா்களுக்கு கால விரயமும், பண விரயமும் ஏற்படுகிறது. எனவே, பேருந்துகளை வழக்கம் போல் கோயில் வாசல் வரை செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.