கோவில்பட்டியில் வீடு இல்லாதவா்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி பகுதிகளில் குடியிருக்கும் முடிதிருத்தும் தொழிலாளா்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும், வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி 5ஆவது தூண் நிறுவனா் தலைவா் சங்கரலிங்கம் தலைமையில் முடிதிருத்தும் தொழிலாளா்கள் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் தரையில் அமா்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் புரட்சி பாரதம் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் தாவீதுராஜா, அனைத்து ரத்த தானக் கழக ஒருங்கிணைப்பாளா் காளிதாஸ், ஐஎன்டியூ தொழிற்சங்க மாவட்ட பொதுச் செயலா் ராஜசேகரன், சமூக ஆா்வலா் ராஜேஷ்கண்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா். பின்னா் அவா்கள் கோட்டாட்சியா் சங்கரநாராயணனிடம் மனு அளித்தனா். இதுகுறித்து துறை அதிகாரிகளிடம் பேசி கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததையடுத்து, போராட்டக்குழுவினா் கலைந்து சென்றனா்.