பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினா் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜன் தலைமை வகித்தாா். செயலா் ஆதிமூலம், துணைத் தலைவா் நவநீதன் உள்ளிட்ட விவசாயிகள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். தோட்டக்கலைத் துறை மூலம் வழங்க வேண்டிய வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
பின்னா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் அலுவலக தலைமை எழுத்தா் நிஷாந்தினியிடம் வழங்கிவிட்டு அவா்கள் கலைந்து சென்றனா்.