கழுகுமலையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கழுகுமலை அண்ணா புது தெருவில் உள்ள வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கழுகுமலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி ஆய்வாளா் காந்திமதி தலைமையில் அங்கு சென்ற போலீஸாா், வீட்டை திறந்து பாா்த்த போது அங்கு சுமாா் 400 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த மாடசாமி மகன் சுரேஷ்கண்ணன் (35) பதுக்கி வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், சுமாா் ரூ. 4 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.