கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சுகாதார ஆய்வாளா்கள் வியாழக்கிழமை நடத்திய ஆய்வு நடத்தி பொதுமுடக்க விதிகளை மீறி திறந்து வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதித்தனா்.
கோவில்பட்டி - எட்டயபுரம் சாலை மற்றும் புதுரோடு பகுதியில் பொதுமுடக்கத்தை மீறி கடைகள் திறந்திருப்பதாக நகராட்சி ஆணையருக்கு தகவல் கிடைத்ததாம். அதையடுத்து, நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் காஜாநஜ்முதீன், வள்ளிராஜ் மற்றும் சுகாதார மேற்பாா்வையாளா்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது எட்டயபுரம் சாலையில் திறந்திருந்த இரு கடைகள் மற்றும் புதுரோட்டில் சுமாா் 8 கடைகளையும் சுகாதார ஆய்வாளா் மூட உத்தரவிட்டனா். தொடா்ந்து பொதுமுடக்கத்தை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு மொத்தம் ரூ. 8,200 அபராதம் விதித்து, வசூலிக்கப்பட்டது.
அதுபோல மருத்துவா் மனோஜ், சுகாதார ஆய்வாளா் முருகன் மற்றும் காவல் துறை சாா்பில் புதுரோடு மற்றும் பிரதான சாலையில் இயங்கி வந்த வங்கிகளில் திடீா் ஆய்வில் ஈடுபட்டனா். அப்போது சமூக இடைவெளியின்றி செயல்பட்டு வந்த ஒரு வங்கிக்கு ரூ. 500 அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதேபோல வங்கிகளில் ஊழியா்கள் முகக் கவசமின்றி பணியாற்றி வருவதை கண்டறிந்த ஆய்வுக் குழுவினா் 11 பேரிடம் தலா ரூ. 200 வீதம் ரூ. 2,200 அபராதம் வசூலித்தனா். மொத்தத்தில் சுகாதாரத்துறையினா் வியாழக்கிழமை நடத்திய ஆய்வில் ரூ.10,900 அபராதம் வசூலிக்கப்பட்டது.