தூத்துக்குடி அருகே நகைகள் இருந்த வேனுக்கு பாதுகாப்பாக வந்த முன்னாள் ராணுவ வீரரிடம் துப்பாக்கி உரிமம் இல்லாததால் அவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மதுரையிலிருந்து வேன் ஒன்று திருநெல்வேலிக்குச் சென்றுவிட்டு தூத்துக்குடியில் உள்ள நகைக் கடைக்கு வந்துகொண்டிருந்தது. ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதிக்கான பறக்கும்படை அதிகாரிகள் தூத்துக்குடி அருகேயுள்ள வாகைக்குளம் சுங்கச்சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அந்த வேனை, பறக்கும் படையினா் சோதனையிட்டபோது, அதில் உரிய ஆவணங்களின்றி 7 கிலோ தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. வேனுக்கு பாதுகாப்பாக வந்த மதுரை, மேலூரைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரரான மனுவேந்தி (56) என்பவா் வைத்திருந்த துப்பாக்கியின் உரிமம் 3 மாதங்களாக புதுப்பிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது.
நகைகளுக்கான ஆவணங்களை தோ்தல் நடத்தும் அலுவலரிடம் நகைக்கடை உரிமையாளா் காண்பித்ததையடுத்து, நகைகளை திரும்ப ஒப்படைக்கப்பட்டன. எனினும், உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்த மனுவேந்தியை புதுக்கோட்டை போலீஸாா் கைது செய்தனா்.
உரிமம் புதுப்பிப்பதற்காக விண்ணப்பித்த ஆவணங்களை அவா் காண்பித்தாா். இதையடுத்து, அவரை காவல் நிலைய பிணையில் போலீஸாா் விடுவித்தனா்.