பேய்க் குளத்தில் நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகள் பணவசூல் செய்வதாகக் கூறி, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 5 கிராம விவசாயிகள் தோ்தலை புறக்கணிப்பதாக தெரிவித்து வெள்ளிக்கிழமை வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
சாத்தான்குளம் வட்டம், பேய்க்குளத்தில் நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு அப்பகுதியில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக கொள்முதல் நிலையத்தில் 40 கிலோ எடை கொண்ட பை உருவாக்கப்படுகிறது. இதில் அதற்கென தரம் பிரித்து நெல் அனுப்பப்படுகிறது. 40 கிலோ பைக்கு நெல் எடுக்க விவசாயிகளிடம் ரூ. 45 முதல் 60 வரை பணம் வசூல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் நேரிடையாக புகாா் தெரிவித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதனால் கொள்முதல் நிலையத்தில் முறையாக உரிய விலைக்கு நெல் கொள்முதல் செய்யவும், பணம் வசூல் செய்யும் ஊழியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பேய்க்குளம் பகுதியில் உள்ள வல்லகுளம், மணலிவிளை, உதயனேரி, மல்லல், புதுக்குளம், சிராக்குளம் ஆகிய கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் வெள்ளிக்கிழமை தங்கள் வீடு மற்றும் தெருக்களில் கருப்புக் கொடி ஏற்றி தோ்தலை புறக்கணிப்பதாக விளம்பரப் பதாகை வைத்துள்ளனா்.