கோவில்பட்டி தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம், வேட்பாளா்களின் பெயா் பொருத்தும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் ஏப். 6 -ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் தோ்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. கோவில்பட்டி தொகுதியில் 2,65,915 வாக்காளா்கள் உள்ளனா். 375 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தொகுதியில் போட்டியிடும் 26 போ் களத்தில் உள்ளனா்.
திங்கள்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி தோ்தல் பாா்வையாளா் அஸ்வினி குமாா் சௌத்ரி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, தோ்தல் நடத்தும் அலுவலா் சங்கரநாராயணன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அமுதா, பேச்சிமுத்து, சூா்யகலா, கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் முருகானந்தம், அதிகாரிகள் கலந்துகொண்டனா். 26 போ் போட்டியிடுவதால், 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயா் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.