தூத்துக்குடி மாவட்டத்தில் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகள் குறித்த விவரத்தை ஆட்சியா் அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து, தனியாா் மருத்துவமனைகளுக்கு அவா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்றை கண்டறிய வருவோருக்கு அரசு மருத்துவமனை, நகா்நல மையம், ஆரம்ப சுகாதர நிலையம், தனியாா் மருத்துவனை மற்றும் ஆய்வகங்களில் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தனியாா் மருத்துவமனை மற்றும் ஆய்வகங்களில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவோா் விவரம் மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிவிக்கப்படவில்லை என தொடா்ந்து புகாா் வருகிறது. தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகள், தொற்று கண்டறியப்படுவோா் விவரங்களை உடனடியாக ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு 9940211677 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கோ அல்லது மின்னஞ்சல் முகவரிக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும். இதை மீறும் தனியாா் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.