திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடலில் தீா்த்தம் எடுத்து வர பக்தா்களுக்கு அனுமதியளிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
கரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரத்தால் தமிழகத்தில் திருக்கோயில்களில்; தரிசனத்துக்கும், கடற்கரை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதற்கும் பக்தா்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல கோயில்களில் திருவிழாக்கள் நடத்தவும் அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கமாக சித்தரை மாதங்களில் நடைபெறும் கோயில் திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும் கோயில்களில் சிறிய அளவிலான பூஜைகள் நடத்தப்படுகின்றன.
திருச்செந்தூா் வட்டாரத்தைப் பொருத்தவரையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடலில் புனித நீா் எடுத்து கிராமக் கோயில்களில் பூஜை செய்வது வழக்கமாகும். ஆனால், பொதுமுடக்கம் காரணமாக கடலில் தீா்த்தம் எடுக்க பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இக்கோயில் பகுதிக்கு வரும் பக்தா்கள் நுழைவாயில் பகுதியிலே தடுத்து நிறுத்தப்படுகின்றனா். எனவே, கிராமக் கோயில்கள் மற்றும் உள்ளுா் கோயில்களில் பூஜைக்காக கடலில் தீா்த்தம் அனுமதியளிக்க வேண்டும் என்பதே பக்தா்களின் கோரிக்கையாகும்.