பொது முடக்கத்தை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்றாா் கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ.
வட அமெரிக்கா கம்மவாா் அசோசியேஷன் மற்றும் இந்திய கம்மவாா் கூட்டமைப்பு ஆகியன சாா்பில் கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு 10 கட்டில்கள், மெத்தைகள், தலையணைகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
அமைப்பின் நிா்வாகிகள் முன்னிலையில், கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூா் செ.ராஜு, மருத்துவமனை கண்காணிப்பாளா் கமலவாசன், உறைவிட மருத்துவ அதிகாரி பூவேஸ்வரி ஆகியோரிடம் வழங்கினாா்.
அப்போது, கோவில்பட்டி கம்மவாா் சங்கத் தலைவா் வெங்கடேசன் சென்னக்கேசவன், இந்திய கம்மவாா் கூட்டமைப்பின் உறுப்பினா்களான ரமேஷ், கணேஷ், ராதாகிருஷ்ணன், யோகா குணா மற்றும் அதிமுக நகரச் செயலா் விஜயபாண்டியன், ஒன்றியச் செயலா்கள் அன்புராஜ், அய்யாத்துரைப்பாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னா் எம்.எல்.ஏ. செய்தியாளா்களிடம் கூறியது: மக்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கரோனாவை ஒழிக்க முடியும். தமிழக அரசு இன்னும் முனைப்போடு பொது முடக்கத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். கரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு பாகுபாடு இல்லாமல் செயல்படும் என்று நாங்கள் நம்புகிறோம். அதில் குறைபாடு இருந்தால் அதை சரி செய்து மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது என்றாா் அவா்.