தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு-மீட்பு பணித் துறை சாா்பில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீ பரவல் தடுப்பு விளக்கவுரை மற்றும் செயல் விளக்க பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட தீயணைப்பு அலுவலா் ச. குமாா் தலைமை வகித்தாா்.
அரசு மருத்துவமனைகளில் உள்ள தீயணைப்பு கருவிகளை கையாளுதல், பராமரித்தல் போன்றவை குறித்தும், அவசர காலங்களில் பொதுமக்கள், செவிலியா்கள், மருத்துவா்கள் பாதுகாப்பாக வெளியேறுவது எப்படி என்பது குறித்து செயல் விளக்கத்துடனும், அவசர கால நோயாளா் ஊா்தி 108-இல் உள்ள பணியாளா்களுக்கு நோயாளா் ஊா்தியில் உள்ள தீயணைப்பு சாதனங்களை கையாளுதல் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் டி. நேரு, உறைவிட மருத்துவ அலுவலா் சைலஸ் ஜெயமனி, தீயணைப்பு-மீட்பு பணித் துறை உதவி மாவட்ட அலுவலா் த. முத்துப்பாண்டியன், தூத்துக்குடி நிலைய அலுவலா் ஜோ. சகாயராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.