கோவில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு மலர், இனிப்புகள் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் 19 மாதங்களுக்குப் பிறகு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திங்கட்கிழமை திறக்கப்பட்டது. அதை யடுத்து தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன், பாம்பே ஸ்வீட்ஸ் உரிமையாளர் வெங்கடேஸ்வரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மண்டலத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம், திமுக நகர செயலர் கருணாநிதி ஆகியோர் மாணவிகளுக்கு மலர் மற்றும் இனிப்புகளை கொடுத்து வரவேற்றனர்.
மேலும் பள்ளி வளாகத்தில் மாணவிகள் அனைவருக்கும் உடல் வெப்பமானி வைத்து பரிசோதனை செய்யப்பட்டு வகுப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் ரூத் ரத்தினகுமாரி, உடற்கல்வி இயக்குனர் மற்றும் ஆசிரியர்கள் அன்புடன் வரவேற்று வகுப்புகளுக்கு அனுப்பி வைத்தனர்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளி முன்பு வந்து அவர்களை பள்ளிக்குள் கைகாட்டி வழி அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல வஉசி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் முனியசாமி தலைமையில் ஆசிரியர்கள் மாணவர்களை அன்புடன் வரவேற்று வகுப்புகளுக்குள் அனுப்பி வைத்தனர்.