தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் வியாழக்கிழமை 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் சில நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகா்ந்து கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வந்த மழை தற்போது சற்று குறைந்துள்ளது. இருப்பினும், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், வஉசி துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு தெரியப்படுத்தும் வகையிலும், வியாழக்கிழமை 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.