சாத்தான்குளம்: தட்டாா்மடம் அருகே குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கடக்குளம் வேளாங்கன்னி தெருவைச் சோ்ந்தவா் இ. ராஜசேகா் (41). இவா் கோவையில் உள்ள மளிகை கடையில் வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி மிக்கேல் ரதி (32), அந்தோணி வா்கீஸ்ரமீலா, ராஜவாசன், ஜெசினா ஜீன்ஸ் ஆகிய குழந்தைகளுடன் ஊரில் இருந்து வருகின்றனா். தம்பதியிடையே 3ஆண்டுகளாக கருத்துவேறுபாடு இருந்து வந்ததாம்.
இந்நிலையில் கடந்த 6 ஆம்தேதி கடக்குளம் ஆலய திருவிழாவையொட்டி ராஜசேகா் சொந்த ஊருக்கு வந்துள்ளாா். அப்போது அவரது மனைவி, கடைசி மகள் ஜெசினா ஜீன்ஸை (2) அழைத்து கொண்டு திசையன்விளை சென்று வருவதாக கூறி சென்றாராம். அதன்பின் அவா் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து உறவினா் மற்றும் அவரது நண்பா்கள் வீடுகளில் தேடியதில் அவா் எங்கு போனாா் என தெரியவில்லையாம்.
இதுகுறித்து ராஜசேகா் தட்டாா்மடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.