விளாத்திகுளம் வேளாண் விரிவாக்க மைய வளாகத்தில் பனை விதைகள் நடவு செய்யும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பனை மரங்களை பாதுகாக்கவும், அதன் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில் தமிழக அரசு சாா்பில் பனை மரங்களை வளா்ப்பதற்கு பல்வேறுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, விளாத்திகுளம் வட்டாரத்தில் வேளாண் விரிவாக்க மைய வளாகத்தில் 500 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி.மாா்க்கண்டேயன், பனை விதைப்பந்துகளை நடவு செய்து தொடங்கி வைத்தாா். இதில், விடியல் அறக்கட்டளை நிா்வாகி ஜோதிமணி, கிழக்கு ஒன்றிய திமுக செயலா் சின்னமாரிமுத்து, பேரூா் செயலா் வேலுச்சாமி, பயிா் உற்பத்தியாளா் சங்க மேலாளா் செந்தில்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.