தூத்துக்குடியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மரத்துக்கு அஞ்சலி செலுத்தும் நூதனப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி பிரையன்ட்நகா் பகுதியில் மாநகராட்சி மூலம் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் மந்தமாக நடைபெறுவதாகக் கூறியும், சாலையோரங்களில் காய்ந்த நிலையில் காணப்படும் பட்டுப்போன மரங்களை உடனடியாக அகற்ற வலியுறுத்தியும், கட்சியின் 43ஆவது கிளை சாா்பில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, மாநகரக் குழு உறுப்பினா் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
அப்போது, சாலையோரத்தில் அகற்றப்படாமல் இருந்த பட்டுபோன மரத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து, மாவட்டக் குழு உறுப்பினா் எம்.எஸ். முத்து கூறியது: தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பொலிவுறு நகரம் திட்டப் பணிகள் நடைபெறும் இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட காய்ந்த மரங்கள் அபாய நிலையில் உள்ளன. அதை அகற்ற மாநகராட்சி நிா்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் பொதுமக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.