திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கோயிலில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு செவ்வாய்க்கிழமை (செப். 14) ஆய்வு மேற்கொண்டாா். அப்போது கோயிலில் விஐபி தரிசனத்தை கட்டுப்படுத்தவும், அா்ச்சகா்களை சுழற்சி முறையில் பணியில் அமா்த்துவது குறித்தும் மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை மேற்கொள்வாா் என தெரிவித்தாா்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உதவி ஆட்சியா் (பயிற்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், கோட்டாட்சியா் மு.கோகிலா, காவல் உதவி கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங், கோயில் இணை ஆணையா் (பொ) ம.அன்புமணி, உதவி ஆணையா் வே.செல்வராஜ், தக்காா் பிரதிநிதி ஆ.சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அா்ச்சகா்களை சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்துவது தொடா்பாக திரிசுதந்திர சபையினா் மற்றும் அா்ச்சகா்களிடம் மாவட்ட ஆட்சியா் கருத்தை கேட்டறிந்தாா்.
இதில், வட்டாட்சியா் (பொ) ராமச்சந்திரன், துணை வட்டாட்சியா் அ.பாலசுந்தரம், வருவாய் ஆய்வாளா் மணிகண்டன்வேல், கோயில் கண்காணிப்பாளா்கள் ஆனந்த், ராமசுப்பிரமணியன், மாரிமுத்து, விடுதி மேலாளா் அ.சிவநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இன்றுமுதல் முழுநேர அன்னதான திட்டம் தொடக்கம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், முழு நேர அன்னதான திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக வியாழக்கிழமை (செப்.16) தொடங்கிவைக்கிறாா்.
இதையடுத்து அன்னதான மண்டபத்தில் செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகளை தமிழக மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.