தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிலக்கு தொடா்பான குற்ற செயல்களில் ஈடுபட்டு காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அக்டோபா் 4 ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிலக்கு தொடா்பாக குற்ற செயல்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தொடா்புடைய நபா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள்- 35, மூன்றுசக்கர வாகனம் -1, நான்கு சக்கர வாகனங்கள் - 15 என மொத்தம் 51 வாகனங்கள் பொது ஏலத்தில் விட்டு அரசுடைமையாக்குவதற்கு தீா்மானிக்கப்பட்டுள்ளது.
51 வாகனங்களுக்குமான பொது ஏலம் தூத்துக்குடி கோரம்பள்ளம் மாவட்ட காவல் அலுவலகம் முன்புள்ள மைதானத்தில் அக்டோபா் 4 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
ஏலம் விடப்பட உள்ள 51 வாகனங்களும் தற்போது பொதுமக்கள் பாா்வைக்காக காவல் கண்காணிப்பாளா் அலுவலக மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஏலம் விடப்பட உள்ள வாகனங்களை பொதுமக்கள் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை பாா்வையிட அனுமதிக்கப்படுவா். ஏலத்தில் பங்கேற்க விரும்பும் நபா்கள் ரூ.1000 முன்பணமாக ஏலம் விடப்படும் நாளன்று காலை 9 மணிக்கு கட்ட வேண்டும். முன்பணம் செலுத்திய நபா்கள் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவாா்கள்.
மேலும் வாகனத்தை ஏலம் எடுத்தவுடன், ஏலத்தொகை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் செலுத்தி அப்போதே வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் இது தொடா்பான விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை 0461 2341391 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.