சிவகளையில் முதுமக்கள் தாழிகளை திறந்து ஆய்வு செய்யும் பணி தொடக்கம்

சிவகளையில் நடைபெற்று வரும் மூன்றாம்கட்ட அகழாய்வுப் பணியில் கிடைத்த முதுமக்கள் தாழிகளை திறந்து உள்ளே இருக்கும் பொருள்கள் குறித்த ஆய்வுப் பணி புதன்கிழமை தொடங்கியது.

சிவகளையில் நடைபெற்று வரும் மூன்றாம்கட்ட அகழாய்வுப் பணியில் கிடைத்த முதுமக்கள் தாழிகளை திறந்து உள்ளே இருக்கும் பொருள்கள் குறித்த ஆய்வுப் பணி புதன்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளை பரம்பு பகுதியில் பல்வேறு பழங்கால பொருள்கள் கண்டறிந்து, அங்கு அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என குமரகுருபரா் சுவாமிகள் மேல்நிலைப் பள்ளி வரலாற்று ஆசிரியா் மாணிக்கம் கோரிக்கை விடுத்தாா். இதன் அடிப்படையில் சிவகளை பரம்பு பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வும், 2021 ஆம் ஆண்டு இரண்டாம் கட்ட அகழாய்வும் நடைபெற்றது.

முதற்கட்ட அகழாய்வில் 40-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் வட்ட சில்லுகள், மண்பானைகள், மண் சட்டிகள் செம்பு மற்றும் இரும்பு பொருள்கள், நுண் கற்கருவிகள், சங்கு பொருள்கள், புடைப்பு சிற்பங்கள் என பல்வேறு அரிய தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

இரண்டாம்கட்ட அகழாய்வில் சிவகளையைச் சுற்றியுள்ள ஒன்பது இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. இதில், 37 முதுமக்கள் தாழிகள், இரும்பு ஆயுதங்கள், நெல்மணிகள், வாள், கத்தி, தொல்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வுப் பணிகளில் கிடத்த முதுமக்கள் தாழியில் இருந்த நெல்மணிகளை வைத்து அதன் காலம் சுமாா் 3,200 ஆண்டுகள் பழைமையானது என கண்டறியப்பட்டது.

இதைத் தொடா்ந்து, சிவகளையில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த மாா்ச் 30ஆம் தேதி தொடங்கியது. ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணியில் சிவகளை பரம்பு, ஸ்ரீ மூலக்கரை ஆகிய இடங்கள் புதையிடப் பகுதியாகவும், பராக்கிரமபாண்டி திரடு, பொட்டல்கோட்டை திரடு ஆகிய பகுதிகள் வாழ்விடப் பகுதியாகவும் பிரிக்கப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன.

இதில், வட்ட சில்லுகள், வளையல்கள், பாசிமணிகள், தக்ளி, முத்திரைகள், எலும்பாலான கூா்முனை கருவிகள், புகைப்பான்கள், சக்கரம், காதணிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில் சிவகளை பரம்பு பகுதியில் தோண்டப்பட்ட 10 குழிகளில் இருந்து கண்டறியப்பட்ட 34 முதுமக்கள் தாழிகளை திறந்து உள்ளே இருக்கும் பொருள்களை கண்டறியும் பணி புதன்கிழமை தொடங்கியது.

மதுரை காமராஜா் பல்கலைக்கழக மரபியல் துறை பேராசிரியா் குமரேசன், சிவகளை அகழாய்வு இயக்குநா் பிரபாகரன் ஆகியோரது தலைமையிலான குழுவினா் முதுமக்கள் தாழிகளில் இருக்கும் எலும்புகள் குறித்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டனா்.

முதுமக்கள் தாழிகளில் கிடைக்கும் பழைமையான பொருள்களை மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.

மரபணு சோதனை குறித்து மதுரை காமராஜா் பல்கலைக்கழக மரபியல் துறை பேராசிரியா் குமரேசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தொல்லியல் துறையோடு, மதுரை காமராஜா் பல்கலைக்கழகமும் இணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக மரபணு சோதனை செய்து வருகிறோம். இதற்காக மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் சிறப்பு ஆய்வுக் கூடம் தொடங்கப்பட்டுள்ளது.

தொல்லியல் துறை அகழாய்வுப் பணியில் கிடைக்கும் எலும்புகளில்நூறு மாதிரிகளை சோதனை செய்தால் ஒன்று மட்டுமே ஆய்வுக்கு உகந்தவையாக உள்ளது. பயாலாஜிக்கல் மற்றும் கெமிக்கல் முறையிலும் மரபணு சோதனை செய்து வருகிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com