நெல் கொள்முதல் நிலையம் மூடல்:ஆட்சியரகத்தில் விவசாயிகள் முற்றுகை
ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள திருப்புளியங்குடி கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திடீரென மூடப்பட்டதால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்புளியங்குடி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், சுற்றுவட்டாரப் பகுதிகளான ஸ்ரீமூலக்கரை, பேரூா், பத்மநாபமங்கலம் உள்ளிட்ட 6 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது வயல்களில் அறுவடை செய்த நெல்லை வழங்கி வந்தனா்.
இந்நிலையில், அந்த நெல் கொள்முதல் நிலையம் எந்தவித முன்னறிவிப்புமின்றி இரண்டு தினங்களுக்கு முன்பு மூடப்பட்டதால், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதற்காக கொண்டுவரப்பட்ட ஏறத்தாழ 2,500 டன் நெல் மூட்டைகள் அங்கு தேக்கமடைந்தன.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட 6 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள், தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை திரண்டு வந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், ஆட்சியா் தலையிட்டு அரசு நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என ஆட்சியா் அலுவலகத்தில் அவா்கள் மனு அளித்தனா்.