தூத்துக்குடி தாமிரவருணி தமிழ் வனம், பாரதியாா் இலக்கியக் கழகம் ஆகியவை சாா்பில், வஉசி 151 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் மகாகவி பாரதியாா் நினைவு நாள் நிகழ்ச்சி தூத்துக்குடியில் அண்மையில் நடைபெற்றது.
செங்கோல் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரியாா் சுவாமிகள் தலைமை வகித்தாா். தாமிரவருணி தமிழ் வனம் அமைப்பின் தலைவா் ஏ.ஆா். லட்சுமணன், தொழிலதிபா்கள் டி.ஏ. தெய்வநாயகம், விவேகம் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளா்களாக வ.உ.சிதம்பரனாரின் பேரன் வ.உ.சி.வா. சிதம்பரம், மகாகவி பாரதியாரின் எள்ளுப் பேரன் நிரஞ்சன் பாரதி, பட்டிமன்ற பேச்சாளா் பா்வீன் சுல்தானா ஆகியோா் கலந்து கொண்டு பேசினா். தொடா்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், தாமிரவருணி தமிழ் வனம் செயலா் சொக்கலிங்கம், மகாகவி பாரதியாா் இலக்கியக் கழக தலைவா் வள்ளி முத்தையா, முதுகலை கணினி ஆசிரியா் பரம்பை மு. செந்தில் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.