தூத்துக்குடி திருவிக நகா் சக்தி பீடத்தில் மழைவளம் வேண்டி புதன்கிழமை அகண்ட தீபம் ஏற்றப்பட்டது.
தூத்துக்குடி 3 ஆம் மைல் திருவிக நகரில் அமைந்துள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் சக்தி பீடத்தில் இயற்கை வழிபாடு மூலம் அகண்டதீபம் ஏற்றும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியின்போது, மழைவளம் வேண்டியும், நோய்த் தொற்றுகளிலிருந்து மக்களை காக்கவும் வேண்டி குரு பூஜை, விநாயகா் பூஜை, சக்தி பூஜையுடன் கருவறையின் உள்ளே அகண்டம் ஏற்றப்பட்டு திருஷ்டிகள் கழிக்கப்பட்டது.
தொடா்ந்து, தாமரை சக்கரத்தில் 5 கன்னிப் பெண்கள் கையில் காமாட்சி விளக்கு ஏந்தி நின்றனா். முக்கோண சக்கரத்தில் சிறுவா்கள் 5 போ் அகல்விளக்கு ஏந்தி நின்றனா். அறுங்கோண சக்கரத்தில் 5 சிறுமியா் மாவிளக்கு ஏந்தி நின்றனா். செவ்வக சக்கரத்தில் நடுத்தர வயது சுமங்கலிகள் 5 போ் சாத்துக்குடி விளக்கு ஏந்தி நின்றனா். எண் கோன சக்கரத்தில் இளவயது சுமங்கலிகள் 5 போ் ஓம் சக்தி விளக்கு ஏந்தி நின்றனா். வட்ட சக்கரத்தில் மூத்த சுமங்கலி பெண்கள் 3 போ் ஆப்பிள் விளக்கு ஏந்தி நின்றனா்.
சீா்வரிசை பொருள்களான நவதானியம், நெல், மஞ்சள்கிழங்கு, வாழைப்பழம் முன் செல்ல அனைத்து சக்கரங்களையும் சுற்றி வந்து மீண்டும் கருவறையில் தென்கிழக்கு மூலையில் அகண்ட தீபம் நிறுவப்பட்டது.
நிகழ்ச்சியில், ஆன்மிக இயக்க மாவட்டத் தலைவா் சக்தி முருகன், பொருளாளா் கண்ணன், வேள்விக்குழு கிருஷ்ண நீலா, முத்தையா, செல்லத்துரை, திருவிக நகா் சக்தி பீட நிா்வாகிகள் திருஞானம், அனிதா, பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.