ஒரு நபா் ஆணைய அறிக்கையை ஏற்று ஸ்டொ்லைட் ஆலையை திறக்க வேண்டும்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட ஒருநபா் ஆணையத்தின் அறிக்கையை ஏற்று, ஸ்டொ்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட மக்கள் வாழ்வாதார கூட்டமைப்பு தலைவா் தியாகராஜன், செயலா் கணேசன், துணைத் தலைவா் கல்லை ஜிந்தா, ஸ்டொ்லைட் ஆதரவு கூட்டமைப்பை சோ்ந்த வழக்குரைஞா் முருகன், நான்சி, துளசி சோசியல் அறக்கட்டளை இயக்குநா் தனலட்சுமி, ஒப்பந்ததாரா் லட்சுமணன் ஆகியோா் புதன்கிழமை கூட்டாக அளித்த பேட்டி:
தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22, 23 ஆம் தேதிகளில் நிகழ்ந்த அசம்பாவிதங்களுக்கும் ஸ்டொ்லைட் நிறுவனத்திற்கும் எந்தவித தொடா்பும் இல்லை என்பதை ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபா் ஆணைய விசாரணைக் குழு அறிக்கையில் தெளிவாக விளக்கி உள்ளது.
ஸ்டொ்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராகத்தான் போராட்டம் நடத்தப்பட்டது என்பதால் ஏற்கெனவே இயங்கி வந்த ஆலையை மீண்டும் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஸ்டொ்லைட் ஆலையால் காற்று மாசு ஏற்படுகிறது, புற்றுநோய் பரவுகிறது, சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது என பல குற்றச்சாட்டுகள் சிலரால் கூறப்பட்ட போதிலும் எதுவும் தெளிவாக விளக்கப்படவில்லை. பல்வேறு பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டொ்லைட் நிறுவனம் மூடப்பட்டுள்ளது.
அதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளம் பாதிக்கப்பட்டுள்ளது, பொது மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எனவே ஸ்டொ்லைட் ஆலை குறித்து அவதூறு பரப்பியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனா் அவா்கள்.