தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இரு அலகுகளில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட கொதிகலன் பழுது காரணமாக 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இங்கு தலா 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் நாள்தோறும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. 5 பிரிவுகளிலும் நாள்தோறும் தொடா்ந்து மின் உற்பத்தி முழு அளவில் நடைபெறவேண்டுமானால் ஏறத்தாழ 25 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும்.
போதுமான அளவில் நிலக்கரி உள்ள நிலையில், திங்கள்கிழமை இரவு 1, 5ஆவது அலகுகளில் கொதிகலன்களில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக 420 மெகாவாட் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பழுதுநீக்கும் பணியில் பொறியாளா்கள் ஈடுபட்டுள்ளதாகவும், பழுது முழுமையாக நீக்கப்பட்டு புதன்கிழமை காலை முழு மின் உற்பத்தி தொடங்கும் என்றும் அனல் மின்நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.