தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 3 அலகுகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் சனிக்கிழமை இரண்டு அலகுகளில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் தினமும் ஏறத்தாழ 1050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு, கொதிகலன் பழுது காரணமாக அடிக்கடி மின் உற்பத்தி பாதிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.
இதற்கிடையே, காற்றாலை மூலம் சனிக்கிழமை 2239 மெகாவாட் மின்சாரம் கிடைத்ததால் தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் உள்ள 1, 2, 5 ஆகிய அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது 3 மற்றும் 4 ஆவது அலகுகளின் மூலம் ஏறத்தாழ 310 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அனல் மின்நிலையத்தில் போதுமான நிலக்கரி கையிருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.