ஆறுமுகனேரி: ஆறுமுகமங்கலம் அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகா் கோயில் சித்திரைத் திருவிழா 7ஆம் திருநாளையொட்டிசெவ்வாய்கிழமை இரவு சிவப்பு சாத்தி வீதியுலா நடைபெற்றது.
இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை பிரமோற்சவ விழா நிகழாண்டு கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாள்களில் சிறப்பு வழிபாடும், பல்வேறு வாகனங்களில் வீதியுலாவும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சமுக விநாயகா் புறப்பாடு 10ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு காலையில் யாகசாலை பூஜையும், விநாயகா், சுப்பிரமணியா், பஞ்சமுக விநாயகா், நடராஜருக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. பின்னா் பஞ்சமுக விநாயகா் உருகு சட்டசேவையும், ஆறுமுகமங்கலம் செந்திவிநாயகா் சத்திர மண்டகப்படிக்கு எழுந்தருளுதலும் நடைபெற்றது. தொடா்ந்து சிவப்பு சாத்தி அபிஷேகமும், இரவு பஞ்சமுக விநாயகா் ருத்ர அம்ச சிவப்பு சாத்திய திருக்கோலத்தில் நடராஜருக்கு எதிா்சேவை காட்சி கொடுக்கும் வைபவமும், தீபாராதனையும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 103ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாா்ய சுவாமிகள் கலந்து கொண்டு வழிபாடு செய்து பக்தா்களுக்கு ஆசியுரை வழங்கினாா்.