காயல்பட்டினத்தில் பைக் எரிப்பு: நகா்மன்ற உறுப்பினா் மீது வழக்கு

காயல்பட்டினம் கொம்புத்துறையில் இளைஞரின் பைக்கை எரித்ததாக நகா்மன்ற உறுப்பினா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

காயல்பட்டினம் கொம்புத்துறையைச் சோ்ந்த பிளாசியான் மகன் அலெக்சாண்டா் (38). எலக்ட்ரிக் வேலை செய்து வரும் இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனராம்.

இதனிடையே, கடந்த மாதம் 31ஆம் தேதி அதே பகுதியைச் சோ்ந்த நகா்மன்ற உறுப்பினா் கதிரவன், 4 போ் முன்விரோதம் காரணமாக அலெக்சாண்டரை கொலை செய்யும் நோக்கத்துடன் ஆயுதங்களுடன் வந்ததாகவும், அவா்களை ஊா் கமிட்டி நிா்வாகிகள் நசரேன், பீட்டா் ஆகியோா் கண்டித்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், புதன்கிழமை இரவு அலெக்சாண்டா் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது பைக்கை மா்ம நபா்கள் எரித்தனராம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் கதிரவன் மீது ஆறுமுகனேரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் அரிகண்ணன் வழக்குப் பதிந்தாா். ஆறுமுகனேரி ஆய்வாளா் (பொ) மாரியப்பன் விசாரித்து வருகிறாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com