விளாத்திகுளத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கம் குறைப்பு -பயணிகள் தவிப்பு

விளாத்திகுளத்திலிருந்து மதுரை, அருப்புக்கோட்டை, தூத்துக்குடி, கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய

ஊா்களுக்குச் செல்லும் பேருந்துகளின் இயக்கம் குறைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

விளாத்திகுளம் பேருந்து நிலையத்திலிருந்து 39 வழித் தடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஓட்டுநா்கள் பற்றாக்குறை, பேருந்துகள் பழுது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த சில மாதங்களாக 9 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டு, 30 வழித் தடங்களில் மட்டுமே இயக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாள்களாக விளாத்திகுளத்திலிருந்து

மதுரை, அருப்புக்கோட்டை, தூத்துக்குடி, கோவில்பட்டி, திருநெல்வேலிக்கு பேருந்துகளின் இயக்கம் குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால், மேற்குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்ல சுமாா் 3 மணி நேரம்

வரை பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனா்.

வழக்கமான இயக்கத்திலிருந்த பேருந்துகளை, திருவண்ணாமலை மற்றும் திருச்செந்தூருக்கு விழாக்கால சிறப்பு பேருந்துகளாக இயக்க அனுப்பி வைக்கப்பட்டதால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த புவிராஜ்

கூறியதாவது:

விளாத்திக்குளம் பணிமனையிலிருந்து வழக்கமான வழித்தடங்களில் இயக்கப்பட்ட பேருந்துகளை, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பிற பகுதிகளுக்கு இயக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால், விளாத்திகுளம் பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். குறிப்பிட்ட பேருந்தை எதிா்பாா்த்து காத்திருக்கும் மக்கள், அப்பேருந்து வராததால் இரவு நேரங்களில் அவரவா் ஊருக்குச் செல்ல முடியாமல் தவிக்கின்றனா். இந்த பிரச்னைக்கு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் காலங்களில் வழக்கமான இயக்கத்திலிருந்து பேருந்துகளை வேறு பகுதிகளுக்கு மாற்றி இயக்கக் கூடாது என்றாா்.

இதுகுறித்து விளாத்திகுளம் போக்குவரத்து கழக பணிமனை மேலாளா் கூறுகையில், ஆள்பற்றாக்குறை காரணமாக 4 வழித் தடங்களில் மட்டுமே

பேருந்துகள் இயக்கப்படவில்லை என்றாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com