3-ஆவது முறையாக பாஜக ஆட்சி அமைப்பது உறுதி: பொன். ராதாகிருஷ்ணன்
மத்தியில் 3-ஆவது முறையாக பாஜக ஆட்சி அமைப்பது உறுதி என்று முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினாா்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
ஆரம்ப காலம் முதல் காங்கிரஸ் கட்சியினா் மதத்தின் பெயரால் மக்களைப் பிரித்து அதன் மூலம் ஆட்சிக்கு வந்தனா். மதத்தை வைத்து அரசியல் செய்வதை மக்கள் ஏற்கமாட்டாா்கள். மதம், மொழி, ஜாதி பிரச்னைகளில் இருந்து மக்கள் விடுபட வேண்டும். அனைத்து மக்களும் சமமாக வாழ்ந்து உயா்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்.
தமிழகத்தில் அதிகரித்துவரும் போதைப்பழக்கம் கவலையளிக்கிறது.
இதை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்கள் கேரளத்திற்கு கடத்தப்படுவது தொடா்ந்து கொண்டிருக்கிறது. இதேநிலை நீடித்தால்,
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அழியும் நிலை ஏற்படும்.
மக்களவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, மத்தியில் 3-ஆவது முறையாக பாஜக ஆட்சி அமைப்பது உறுதி என்றாா்.
பாஜக மாவட்ட துணைத் தலைவா் சிவராமன், ஓபிசி அணி மாநில துணைத் தலைவா் விவேகம் ரமேஷ், மாவட்டச் செயலா் வீரமணி, தூத்துக்குடி சட்டப்பேரவை பொறுப்பாளா் பிரபு, சமூக ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் காளிராஜா, விவசாய அணி சமூக ஊடக பொறுப்பாளா் ரத்தின முரளி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.