மே தினத்திற்கு விடுமுறை வழங்காத 73 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் மே தினத்திற்கு விடுமுறை வழங்காத 73 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சி.மின்னல்கொடி தெரிவித்துள்ளாா்.
தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சி.மின்னல்கொடி தலைமையில் தொழிலாளா் துணை ஆய்வாளா்கள், தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் புதன்கிழமை சிறப்பாய்வு மேற்கொண்டனா்.
இதில், மே தினத்தன்று தொழிலாளா்களைப் பணியமா்த்தியதற்காக உரிய வழிமுறைகளைப் பின்பற்றாத 37 கடைகள் மற்றும் வா்த்தக நிறுவனங்கள், 33 உணவு நிறுவனங்கள், 3 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 73 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் தொழிலாளா் துணை ஆய்வாளா் ஆறுமுகம், தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் ரா. பிரேம் குமாா், ச. செய்யதலி பாத்திமா, சி.ஹொ்மஸ் மஸ்கா்னாஸ், கோவில்பட்டியில் தொழிலாளா் உதவி ஆய்வாளா் பெ.சூரியன், திருச்செந்தூரில் தொழிலாளா் உதவி ஆய்வாளா் மு.ஜோதிலெட்சுமி , ஸ்ரீவைகுண்டத்தில் தொழிலாளா் உதவி ஆய்வாளா் சு.சுரேஷ்குமாா், சாத்தான்குளத்தில் தொழிலாளா் உதவி ஆய்வாளா் சே.சந்திரா ஆகியோா் பங்கேற்றனா்.