துறையூர், ஏப். 27: திருச்சி மாவட்டம், துறையூர் அருகேயுள்ள கண்ணனூர் இமயம் கல்லூரி பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு இமயம் கல்வி நிறுவனங்களின் தலைவர் பி. பெரியண்ணன் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் ஏ. ஆண்டி, இயக்குநர் டி. பிரபு, கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் ராஜப்பன், பொறியியல் கல்லூரி முதல்வர் சுந்தரராஜ், கல்வியியல் கல்லூரி முதல்வர் அய்யாக்கண்ணு, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ராஜசேகரன், நிர்வாக அலுவலர்கள் கணபதி, ரஹ்மான் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று சிவானி கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர் பி. செல்வராஜ் பேசியது:
நாங்கள் படித்த போது பட்டம் வாங்க சென்னை சென்றோம். ஆனால், இன்று படித்த கல்லூரியில் பெற்றோர்கள், உறவினர்கள் முன்னிலையில் பட்டம் பெறும் அளவுக்கு நடைமுறைகள் எளிமையாகி உள்ளன.
பெற்றோர்களின் தியாகத்தால் பட்டம் பெற்றோம் என்பதை மறந்து, இளைய சமுதாயத்தினர் பட்டம் பெற்ற பிறகு, வேலை, திருமணம் என்று குறுகிய வட்டத்துக்குள் சென்று விடுகின்றனர்.
இளைஞர்கள் பெற்றோர்களைப் பேணுவதையும், பெரியோர்களுக்கு மதிப்பளிப்பதையும் கடமையாகக் கொள்ள வேண்டும். கல்விச்சாலையை விட்டு வெளியேறும் அந்தந்த ஆண்டு மாணவ, மாணவிகள் தாங்கள் படித்ததன் நினைவாக அங்குள்ள நூலகத்திற்கு நல்ல புத்தகங்கள் வாங்கித் தரும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். பொறியியல் பட்டதாரிகள் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறி விடுவதால், வேலை தருகிற நிறுவனங்கள் கலை, அறிவியல் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளித்து அவர்களை ஊக்குவிக்க விரும்புகின்றன.
நமது நாட்டில் இளைஞர்கள் அதிகம் உள்ளனர். இது இந்தியாவுக்கு வலிமை. வெளிநாட்டு நிறுவனங்கள் நமது நாட்டின் படித்த இளைஞர்களால் கவரப்பட்டு, அவர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கின்றன. இதனால், நாட்டின் அன்னியச் செலாவணியும், இளைஞர்களின் தனிநபர் வருமானமும் பெருகியுள்ளது. இது உலக அளவில் இந்தியாவுக்கு பெருமை தரக்கூடிய விஷயமாக உள்ளது என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை அவர் வழங்கினார்.