தஞ்சாவூர், பிப். 13: தஞ்சாவூர் உக்கிரகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகள் ஞாயிற்றுக்கிழமை திருட்டுப் போனது.
தஞ்சாவூர் கீழவாசல் குயவர் தெருவில் உக்கிரகாளியம்மன் கோயில் உள்ளது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயில், மாமன்னன் ராஜராஜ சோழனின் குலதெய்வ கோயில்களில் ஒன்றாக திகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இந்தக்கோயில் புதுப்பிக்கப்பட்டு ஜன. 26-ம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. தற்போது மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு கோயில் பூசாரி ஆதிசோழன் கோயிலை திறந்த பிறகு, கோயில் அலுவலகத்தில் வேறு பணிகளை செய்து கொண்டிருந்தாராம். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த இரண்டு பவுன் தங்கத் தாலி, ஒரு பவுன் கண் மலர், அரை பவுன் கண் புருவம், கால் பவுன் மூக்குத்தி ஆகியவை திருட்டுப் போனதாம். இவற்றின் மதிப்பு ரூ.60 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.