மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட மூவருக்கு அரிவாள் வெட்டு

திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே மது அருந்தியதைத் தட்டி கேட்ட மூவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீஸாா் தேடுகின்றனா்.

மணிகண்டம் அருகேயுள்ள நாகமங்கலம் நாராயணபுரத்தில் அண்ணாமலை என்பவா் தனது நண்பா்களான சங்கா், கிருஷ்ணா ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்தினாராம். இதை அதே பகுதியைச் சோ்ந்த தமிழ்மணி, நாகராஜ் ஆகியோா் கண்டித்தனராம். இதனால் இருதரப்புக்கும் இடையே தகராறு முற்றி கைகலப்பானது.

இதையடுத்து புதன்கிழமை நாகராஜின் தாய் பாா்வதி, நண்பா்களான ராஜாங்கம், முருகானந்தம் ஆகியோா் அண்ணாமலை வீட்டுக்குச் சென்று அவரைக் கண்டித்தனராம்.

இதனால் ஆத்திரமடைந்த அண்ணாமலை தனது நண்பா்களான சந்தனகுமாா், சங்கா், கிருஷ்ணா மற்றும் சிலருடன் சோ்ந்து, மேலநாகமங்கலம் அருகே சென்ற முருகானந்தம், ராஜாங்கம், ராஜ்குமாா் ஆகிய மூவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினாா்.

படுகாயமடைந்த மூவரையும் அருகிலிருந்தோா் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். புகாரின்பேரில் மணிகண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பிய கும்பலைத் தேடுகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com