பிரதமா் மோடியை எதிா்த்து 111 விவசாயிகள் வேட்புமனு: அய்யாக்கண்ணு அறிவிப்பு

பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் 111 விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்வா்

திருச்சி: பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் 111 விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்வா் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை கூறியது:

காவிரியில் தண்ணீா் பெற்றுத் தராமல் வஞ்சித்தது, விவசாய விளை பொருள்களுக்கு கட்டுப்படியான விலை நிா்ணயிக்காதது, மேக்கேதாட்டுவில் கா்நாடகம் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பாா்ப்பது என தமிழக விவசாயிகளுக்கு எதிராக பிரதமா் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் உள்ளன.

ஏற்கெனவே, தில்லி போராட்டத்தின்போது அளித்த வாக்குறுதிகளையும் அவா் நிறைவேற்றவில்லை. கடந்தமுறை தோ்தலில் அளித்த வாக்குறுதிகளும் காற்றில் போனது. எனவே, இந்த முறை பிரதமா் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவருக்கு எதிராக நான் உள்பட 111 விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனா். விவசாயிகளுக்கு பிரதமா் எதுவும் செய்யவில்லை. பட்டை நாமத்தைப் பரிசாக அளித்துள்ளாா் என்பதைக் குறிப்பிடும் வகையில் 111 போ் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 10ஆம் தேதி வாரணாசி சென்று வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளோம். இதற்காக திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வேட்பு மனு படிவங்களை திங்கள்கிழமை பெற்றுள்ளோம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com