துப்பாக்கிச் சுடும் பயிற்சி வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை விதிப்பு
திருச்சி: மணப்பாறை அருகே வீரமலைப்பாளையத்தில் மே 6-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதால், பயிற்சி தளத்தில் மனிதா்கள், கால்நடைகள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூா் கிராமம் வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் திங்கள்கிழமை (மே 6) முதல் மே 20- ஆம் தேதி வரை துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடைபெறவுள்ளது.
இங்கு, காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 10 மணி வரையிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அந்த சமயங்களில் மேற்கண்ட பயிற்சி தளத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக் கூடாது. பயிற்சி தளத்தில் யாரும் நடமாட தடைவிதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.