அரியலூர் பேருந்து நிலையத்தை விரிவுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர் சோழன்குடி எஸ்.எஸ்.கணேசன், மாவட்ட ஆட்சியர் எ.சரவணவேல்ராஜிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தார்.
மனுவில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 1975 ஆம் ஆண்டு அரியலூர் நகராட்சி அருகே பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. அன்றைய தமிழக முதல்வராக இருந்த மு.கருணாநிதி பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.
இதனால், நகருக்குள் போக்குவரத்து நெரிசல் குறைந்து, அரியலூர் மக்களுக்கு ஏராளமான புதிய போக்குவரத்து வசதிகளும் ஏற்பட்டன. ஆனால் காலப்போக்கில் இந்தப் பேருந்து நிலையம் சுகாதாரச் சீர்கேடுகளின் இருப்பிடமாகவே மாறியுள்ளது. மக்கள் தொகையின் பெருக்கத்தால் பேருந்து நிலையத்தில் நாளுக்கு நாள் மக்களின் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. பேருந்து நிலையத்தினுள் பயணிகள் நிற்க வேண்டிய இடத்தில் தரைக் கடைகள் அதிகமாக ஆக்கிரமித்துள்ளதால், மேற்கூரைக்கு வெளியே பயணிகள் வெயிலிலும் மழையிலும் நிற்கிறார்கள். அமர்வதற்கு கூட அங்கு வசதிகள் இல்லை. பயணிகள் ஓய்வு அறை மது அருந்துபவர்களின் கூடாரமாக திகழ்கிறது. பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பிட வசதி கிடையாது. அருகிலேயே உள்ள கட்டணக் கழிப்பிடத்தில் எந்த அறிவிப்புப் பலகையும் இல்லாமல் ரூ.5 வசூல் செய்யப்படுகிறது. எனவே இந்த பேருந்து நிலையத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதனை விரிவுப்படுத்தி, முன்மாதிரியான பேருந்து நிலையமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.