அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அடுத்த கீழகுடியிருப்பு பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் 3 ஆவது நாளாக திங்கள்கிழமையும் அந்த கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜயங்கொண்டம் அருகே கீழகுடியிருப்பு அருகே மலங்கான் குடியிருப்பு செல்லும் சாலையில் அமைக்கப்பட்ட புதிய டாஸ்மாக் கடையால், அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவதாக கூறி அந்த கடையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடந்த சனிக்கிழமை முதல் சம்பந்தப்பட்ட அந்த கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தொடர்ந்து அவர்கள் 3 ஆவது நாளாக திங்கள்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஜயங்கொண்டம் டிஎஸ்பி கென்னடி மற்றும் ஜயங்கொண்டம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று ஒரு வாரத்துக்குள் கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.