செந்துறை அருகே இளைஞரை தாக்கிய திமுக பிரமுகர் மீது வழக்கு
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே அதிக பாரத்துடன் வந்த லாரியை சிறைபிடித்த இளைஞரைத் தாக்கிய திமுக பிரமுகர் மீது போலீஸார் புதன்கிழமை இரவு வழக்குப் பதிந்தனர்.
நயினார்குடிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் மகன் அலெக்ஸ்பாண்டியன் (27). புதன்கிழமை இரவு இவர் தாமரைப்பூண்டி - மருங்கூர் சாலையில் சென்றபோது, மணக்குடையான் சுண்ணாம்புக் கல் சுரங்கத்திலிருந்து வந்த லாரி, அவர் மீது மோதுவது போல வந்து நின்றது.
இதனால் பதட்டமடைந்த அலெக்ஸ்பாண்டியன்,அவ்வழியாக வந்த லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது சிமென்ட் ஆலைக்கு ஆதரவாக வந்த செந்துறை திமுக ஒன்றியச் செயலர் ஞானமூர்த்தி, லாரிகளை விடுவிக்குமாறு கூறினார்.
இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ஞானமூர்த்தி, அலெக்ஸ்பாண்டியனை தாக்கினார். இதையறிந்த ஆதனக்குறிச்சி,தாமரைப்பூண்டி,முள்ளுகுறிச்சி கிராம மக்கள் அலெக்ஸ்பாண்டியனுக்கு ஆதரவாக சுண்ணாம்புக் கல் சுரங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த குவாகம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி,ஞானமூர்த்தி மீது நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியின்பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். அலெக்ஸ்பாண்டியன் அளித்த புகாரின்பேரில் ஞானமூர்த்தி மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.