அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே பைக்கில் சென்றவர்களிடம் கைபேசிகளை பறித்துச் சென்ற 6 இளைஞர்களை தா.பழூர் போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாராசுரத்தைச் சேர்ந்தவர் தங்கசாமி மகன் தினேஷ் (20). இவர் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் தன்னுடன் படிக்கும் சுவாதி என்ற பெண்ணுடன் தா. பழூர் அருகே உள்ள கோட்டியால் கிராமத்திற்கு வந்துவிட்டு கும்பகோணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த காரைகுறிச்சி அருகே இடங்கண்ணியை சேர்ந்த கணபதி மகன் பிரபாகரன் (26), இளங்கோவன் மகன் ராஜ்மோகன் (19), காரைகுறிச்சியைச் சேர்ந்த கரும்பாயிரம் மகன் ராஜா (23), வீரமணி மகன் வெங்கடேஷ் (24), மைக்கேல்பட்டியை சேர்ந்த செபாஸ்தியான் மகன் ஜார்ஜ் (23), மைக்கேல்ராஜ் மகன் பேட்டிலாஸ் (25) ஆகியோர் தினேஷ், சுவாதியை வழிமறித்து மிரட்டி அவர்களிடமிருந்து செல்லிடபேசிகளை பறித்து சென்றனர்.
இதுகுறித்து தா.பழூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் லட்சுமிபிரியா வழக்கு பதிந்து 6 பேரையும் கைதுசெய்து விசாரித்து வருகின்றார்.