அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள முந்திரிகாட்டில் தூக்கிட்ட நிலையில் தொங்கிய புதுமாப்பிள்ளையின் சடலத்தை போலீஸார் வியாழக்கிழமை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செந்துறை அருகேயுள்ள குமிழியம் காலனித்தெருவைச் சேர்ந்தவர் மகேஷ் (32). பெயிண்டர். இவருக்கு கடந்த மாதம் 10 ஆம் தேதி திருமணமானது. அன்றிலிருந்து குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்ததாம். இந்நிலையில் புதன்கிழமை இவர், தனது மனைவியை உறவினர் வீட்டில் விட்டு விட்டு, ஊருக்கு திரும்பியவர் வீட்டுக்கு வரவில்லையாம். குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை சிறுகடம்பூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான முந்திரிகாட்டில் மகேஷ் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடப்பதாக இரும்புலிக்குறிச்சி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், சடலத்தை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.